திருவாரூர், ஜுன் 30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரும், நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில துணை பொதுச் செயலாளருமான தோழர் ஆர்.மோகன் ஞாயிற்றுக்கிழமை நேர்ந்த சாலை விபத்தில் காலமானார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் நார்த்தங்குடி கிராமத்தில் வசித்த இவர், மாவட்ட நுகர்பொருள் வாணிப கழ கத்தில் இளநிலை உதவியாளராக பணியில் இருந்தார்.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டமாக இருந்த போது, தோழர் ஆர்.மோகன் சிபிஎம் வலங்கைமான் ஒன்றியச் செயலாளராக இருந்து மக்கள் பணியாற்றியவர். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை, நார்த்தங்குடியில் இருந்து ஆலங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நார்த்தங்குடி மெயின் சாலையில் அவ ருக்குப் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், எதிர்பாராத விதமாக மோகனின் இரு சக்கர வாகனத்தில் மோதி விட்டு, இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் விட்டு விட்டு தப்பித்து சென்றார்.
விபத்தில் கீழே விழுந்த தோழர் மோகன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே உயி ரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வலங்கைமான் காவல்துறையினர் தோழர் மோகனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழரின் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் நேரில் சென்று அன்னாரது உட லுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத் தினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன், வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த மோகனின் துணைவியார் எம்.கலைச்செல்வி, சிபிஎம் உறுப்பினர் ஆவார். இவருக்கு எழிலரசன் என்ற மக னும், எழிலரசி என்ற மகளும் உள்ளனர். சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், வண்ணக்கதிரில் எழுதிய களப் போராட்டத்தில் கம்யூ னிஸ்டுகள் என்ற கட்டுரையில் இடம்பெற்ற, களப் போராளியான மூத்த தோழர் ஏ.தங்கவேலின் மருமகன் ஆவார். தோழர் மோகனின் இறுதி நிகழ்ச்சி திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் நார்த்தங்குடியில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெறுகிறது.