திருநெல்வேலி, ஆக.25- நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் 10 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகள் மூலம் மீன்களைப் பிடித்து வருகின்றனர். இதனிடையே கூடங்குளம் கடற்கரை பகுதியில் சனிக்கிழமை மாலை நேரத்தில் லட்சக் கணக்கிலான கிளாத்தி வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. மேலும் கரை ஒதுங்கிய மீன்களால் துர்நாற்றமும் வீச துவங்கியுள்ளது.
மேலும் இது குறித்து ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு அவைகள் விற்பனை ஆகாததால் கடலில் கொட்டப்பட்டுள்ளன அந்த மீன்கள் கடற்கரை ஓரம் ஒதுங்கியதாக தெரிவித்தனர்.
மேலும் 2ஆவது நாளாக ஆக.25 ஞாயிற ன்றும் கரை ஒதுங்கிய மீன்களால் அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது.
முதலமைச்சர் கோப்பை போட்டி: முன்பதிவுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு
சென்னை,ஆக. 25- தமிழக முதலமைச்சர் கோப்பை-2024 விளையாட்டு போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு கடந்த 4 ஆம் தேதி முதல் https:/sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. முன் பதிவிற்கான கடைசி நாள் ஆக. 25 ஞாயிற்றுக்கிழமை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற அமோக வரவேற்பை தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்திட கால அவகாசம்வரும் 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய ‘ஆடுகளம்’ என்ற தகவல் தொடர்பு மையத்தை (95140 00777) அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.