புதுக்கோட்டை, மே 27- தமிழ்நாடு வனத்துறை மற்றும் ஓம்கார் நிறுவனம் சார்பில், காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மயம் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், கடல் ஆமைகள் மற்றும் கடற்பசுக்கள் பாதுகாப்பில் தொழில்நுட்பங்கள் தொடர்பாக வனப் பணியாளர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை புதுக்கோட்டையில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை வனப் பாதுகாவலர் (திருச்சி) ஏ. பெரியசாமி தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தார். காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்ட இயக்குநர் பி. முகம்மதுசபாப் பயிற்சியின் நோக்கங்கள் குறித்துப் பேசினார். புதுக்கோட்டை வன அலுவலர் சோ. கணேசலிங்கம், தஞ்சை மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மீன் பிடிக்கும்போது வலையில் சி்க்கிய கடல் ஆமைகளை பத்திரமாக மீண்டும் கடலுக்குள்ளேயே விடுவித்த 5 மீனவர்களுக்கு பாராட்டும், ரொக்கப் பரிசும், வன அலுவலர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை வரை முத்துப்பேட்டை, பி.ஆர்.பட்டினம், குருசடை தீவு ஆகிய இடங்களில் களப் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அதிலுள்ள தொழில்நுட்பங்கள் குறித்தும் இந்தப் பயிற்சியின்போது முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.