திருவாரூர், ஜன.6- திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தி.சாருஸ்ரீ வெளியிட்டார். 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம்-2025 தொடர்பாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள 166-திருத்துறைப்பூண்டி(தனி), 167-மன்னார்குடி, 168-திருவாரூர், 169-நன்னிலம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.6 இல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது. தற்போது, 06.01.2025 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 166-திருத்துறைப்பூண்டி(தனி) சட்டமன்றத் தொகுதியில் 1,17,501 ஆண்கள், 1,23,521 பெண்கள், 15 இதரர் உள்ளிட்ட மொத்தம் 2,41,037 வாக்காளர்களும், 167-மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் 1,24,594 ஆண்கள், 1,33,738 பெண்கள், 8 இதரர் மொத்தம் 2,58,340 வாக்காளர்களும், 168 திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் 1,37,519 ஆண்கள், 1,46,760 பெண்கள், 29 இதரர் மொத்தம் 2,84,308 வாக்காளர்களும், 169 நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1,38,543 ஆண்கள், 1,42,395 பெண்கள், 17 இதரர் மொத்தம் 2,80,955 வாக்காளர்கள் உள்ளிட்ட ஆக மொத்தம் 10,64,640 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியல்கள், திருவாரூர் மற்றும் மன்னார்குடி வருவாய்க் கோட்ட அலுவலர் அலுவலகங்கள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி ஆணையர் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியல்களை வலைதளத்திலும் காணலாம் நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் உடனிருந்தனர்.