வேதாரண்யம், ஜன.14 - பொங்கல் விழாவில், தனது தந்தை படும் கஷ்டத்தை பாடலாக பாடி வெளிப்படுத்தியுள்ளார் அரசுப் பள்ளி மாணவர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காட்டில் அமைந்துள்ள அரசு உதவி தொடக்கப் பள்ளியில் வெள்ளியன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து கொண்டாடினர். இவ்விழாவை முன்னிட்டு, மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது, மதன் என்ற நான்காம் வகுப்பு மாணவர் பாட்டுப் போட்டியில் பங்கேற்றார். இவர் நித்தியானந்தம் என்ற உப்பளத் தொழிலாளியின் மகனாவார். மாணவர் மதன், தனது தந்தை படும் கஷ்டத்தை மழலைக் குரலில் பாடலாக பாடி வெளிப்படுத்தினார். இச்சிறுவன், தந்தை படும் கஷ்டத்தை நெகிழ்ச்சியுடன் பாடியது அனைவரையும் கவர்ந்தது.