districts

img

தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், செப். 4-  தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை மீது விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை மாநகராட்சியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அலுவலர்கள் உறுதி அளித்தனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்க குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி அதற்கு தீர்வு காணுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். அதன்பேரில், தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிக்கொணர்வு தூய்மை பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் கண்ணன் தலைமை வகித்தார். மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 5 ஆவது கோட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப உரிய வேலை வாய்ப்பு, தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்விக்கடன், தொழில்கடன் தாட்கோ மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இதே போல் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 14 கோட்டங்களிலும் தூய்மை பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும்” என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.