தஞ்சாவூர், நவ.23 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பான் செர்க்கஸ் பப்ளிக் பள்ளியில் டெக்டிரிக்-2024 அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்க மாவட்ட உதவி ஆளுநர் சிவச்சந்திரன் தலைமை வகித்து, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ரோஸ்லின் மலர்கொடி முன்னிலை வகித்தார். மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் நாகராஜன், பொருளாளர் சுந்தரம், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு புதுமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் அறிவியல் மட்டுமல்லாமல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், எகோ கிளப் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மாணவர்களிடம் மொழி மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது- இந்த அறிவியல் கண்காட்சியில் இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், தூய வளனார் ஆங்கிலப் பள்ளி மாணவ, மாணவிகள், லிட்டில் பிளவர் பள்ளியின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியை 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். ரோட்டரி சங்கம் சார்பாக, பசுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக 2000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சிவச்சந்திரன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்கினார்.