திருச்சிராப்பள்ளி, ஜூன் 11- சிஐடியு சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட 11 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் செவ்வாயன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் சந்திரன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் சுரேஷ் சமர்ப்பித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். அரசு போக்குவரத்து சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மாணிக்கம், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆன்-லைன் அபராதத்தை தடை செய்ய வேண்டும். சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். திருச்சியில் சிஎன்ஜி கேஸ் பங்குகளை அதிகப்படுத்த வேண்டும். மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். நலவாரிய பதிவுகளை எளிமையாக்கி, பணப் பயன்களை இரட்டிப்பாக்கி, விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சுரேஷ், செயலாளராக டி.சந்திரன், பொருளாளராக ஆண்டனி சுரேஷ் மற்றும் துணை நிர்வாகிகள் உட்பட 17 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொருளாளர் பார்த்தசாரதி, நிறைவுரையாற்றினார். சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆண்டனி சுரேஷ் நன்றி கூறினார்.