நாகர்கோவில், ஜுன் 3- பேச்சிப்பாறை அணையில் இருந்து பாச னத்திற்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 850 கன அடியில் இருந்து ஒரே நாளில் 535 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை நீரை ஜுன் 1 சனியன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திறந்து விட்டார். முதல்நாளில் 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் எங்கும் மழை இல்லை. கேரளத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை குமரி மாவட்டத்தில் இதுவரை எட்டிப்பார்க்கவில்லை. பருவ மழைக்கான அறிகுறியாக தொடர்ந்து காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் ஞாயிறன்று காலை 6 மணிக்கு 45. 45 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 850 கன அடியில் இருந்து ஞாயி றன்று 535 கன அடியாக குறைக்கப்பட்டது. சிற்றாறு அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.