districts

img

கழிவுப் பொருட்களுடன் வந்த வாகனங்களை போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

அருமனை, பிப். 4-      கழிவு பொருட்களுடன் வந்த ஒரு வாகனத்தையும், ரேசன் அரிசியுடன் வந்த ஒரு வாகனத்தையும் மாங்கோடு பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரமான  அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருகின்ற வாகனங்களை சோதனையிட்டு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  சோதனைச்சாவடிகளை தாண்டி வருகின்ற சந்தேகத்துக்கு உரிய வாகனங்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அருமனை அருகே மாங்கோடு பகுதியில் திங்கட்கிழமை மாலையில் அதிக துர்நாற்றத்துடன் வந்த வாகனத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் கோழிக்கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. ஓட்டுநரைப் பிடித்து விசாரித்த போது பன்றி பண்ணைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அருமனை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இன்னொரு வாகனம் மூடப்பட்ட நிலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சந்தேகத்துக்கிடமளித்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அருமனை  போலீசார் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இரண்டு வாகனத்தின் ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பறிமுதல் செய்த இரண்டு வாகனங்களும் அருமனை காவல் நிலையம் கொண்டுவரப்பட்டன. வாகனங்கள் மீதும் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.