districts

ஜூலை 19 தஞ்சாவூரில் 7 ஆவது புத்தக திருவிழா தொடக்கம்

தஞ்சாவூர், ஜூன் 30 -  தஞ்சாவூரில் ஜூலை 19 ஆம் தேதி ‘தஞ்சாவூர் புத்தகத் திருவிழா’ தொடங்கவுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 ஆவது ஆண்டாக ஜூலை 19 முதல் 29 ஆம் தேதி வரை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தோடு இணைந்து, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் ஏராளமான தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் இடம் பெறவுள்ளன. இதில் பிரபல புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஜனவரி மாதம் நடைபெற்ற சென்னைப் புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்ட புதிய புத்தகங்கள், தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் வாசகர்களுக்காக விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த புத்தக திருவிழாவோடு சேர்த்து உணவுத் திருவிழாவும் அங்கு நடைபெறவுள்ளது. மேலும், தினமும் பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றங்கள், இலக்கிய சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், பணிகள் ஒதுக்கீடு செய்வது குறித்தும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கடந்தாண்டை காட்டிலும் நிகழாண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த அரசுத் துறைகளின் அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.