தஞ்சாவூர், மே 27- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட்ட முகாமில், தனியார் நிறுவன பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் திங்கட்கிழமை பணிநியமன ஆணைகளை வழங்கினார். கடந்த மே 23 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வந்த தனியார் நிறுவனங்களான குறிஞ்சி மெட்ரோ பஜார், வெற்றி டாட்டா மோட்டார்ஸ் மற்றும் வே டு நியூஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 16 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் கா.பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.