4 அதிக மன அழுத்தம் கொடுக்கும் பள்ளி நிர்வாகம்
4 தகாத வார்த்தைகளால் திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி
திருச்சிராப்பள்ளி, நவ.3- அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக தகாத வார்த்தை களால் திட்டி அதிக மன அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு காரணமான செல்லம்மாள் மெட்ரிக் பள்ளி உரிமையாளர், முதல்வர்,ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மோகன், புறநகர் மாவட்ட செயலாளர் ஆமோஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வேங்கூர் அருகே செல்லம்மாள் மெட்ரி குலேசன் (சிபிஎஸ்இ) பள்ளி இயங்கி வருகிறது . இப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவிகள் கட்டாயம் பள்ளி விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என ஒரு நடைமுறை உள்ளது. மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு பள்ளியாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றாலோ, அல்லது பள்ளியில் இருந்து இடையிலே சென்றாலோ மாற்றுச் சான்றிதழை தராமல் அலைக்கழிக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவியின் பெற்றோரை இந்திய மாணவர் சங்கத்தினர் சந்தித்து விபரத்தை கேட்டனர். அப்போது பெற்றோர் கூறுகையில், செல்லம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதால் இரவு முழுவதும் விடுதியில் சிறப்பு வகுப்பு நடத்துகின்றனர். தகாத வார்த்தைகளால் திட்டி மாணவிகளை அடிமைகளை போல நடத்துகின்றனர். மாணவர்கள் முன்னாலே பெற்றோர்களை மிக கொடூரமாக பேசுவது நடைமுறையாகவே உள்ளது என்று தெரிவித்தனர். வணிகவியல் ஆசிரியர் வினோத் என்பவர் மாணவிகள் விடுதிக்கு இரவு நேரங்களில் வந்து, அதிகாரத் திமிருடன் மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டு கிறார். படிப்பை தொடர வேண்டும் என்கிற ஒரே காரணத்தால் இதனை பெற்றோர்களிடம் கூட சொல்ல முடியாமல் மாணவிகள் தவித்து வருகின்றனர். 12 ஆம் வகுப்பு மாணவியையும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் ஆசிரியர் வினோத் திட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி பள்ளி முதல்வர் பகவதியிடம் கூறியுள்ளார். அவரும் கண்டு கொள்ளாததால், சில மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையறிந்த விடுதி காப்பாளர், பள்ளி முதல்வர் பகவதிக்கு தகவல் கொடுக்க, மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதற்காக, விடுதியிலே வைத்து மாணவிக்கு புளியை கரைத்து கொடுத்ததாகவும், இளநீர் கொடுத்ததாகவும் பெற்றோர்களிடம் பள்ளி முதல்வர் கூறியுள்ளார். பிள்ளையை மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கவில்லை என்றால் காவல்துறையினருடன் பள்ளிக்கு வருவதாக பெற்றோர் எச்சரித்தனர்.இதன்பின்னரே மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்வதாக பள்ளி முதல்வர் சம்மதித்தார். இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெற்றோரிடம் புகார் மனுவை வாங்காமல் பள்ளி நிர்வாகம் பிரச்சனையை பேசி முடித்ததாக கூறியுள்ளனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வேறு வழியின்றி ஆசிரியர் வினோத் மீது திருவெறும்பூர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் கைது செய்ய வில்லை.
கண்டுகொள்ளாத காவல்துறை-கல்வித்துறை
எனவே இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு, மாணவ, மாணவி களை தற்கொலை முயற்சிக்கு உள்ளாக்கும் செல்லம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் வினோத், பள்ளி முதல்வர் பகவதி, பள்ளியின் உரிமையாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். பெற்றோர் புகார் கொடுத்தும் குற்றவாளியை கைது செய்யாது அலட்சியப்படுத்தும் திருவெறும்பூர் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை இந்திய மாணவர் சங்கம் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தை நடத்தும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.