தஞ்சாவூர், நவ.21 - காவிரி பாசனப் பகுதியில், சம்பா பருவத்தில் ஒரு போகமாக நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சம்பா பருவத்தில் சரியான வழிமுறைகளை பின்பற்றினால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி, எதிர்பார்க்கும் மகசூல் எளிதில் கிடைக்கும். இதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால சம்பா ரகங்களான ஆடுதுறை - 51, சி.ஆர்.1009 என்கிற சாவித்திரி, சி.ஆர். சப் -1 போன்ற ரகங்கள் நேரடி விதைப்பிற்கும், நாற்று விட்டு நடவு செய்வதற்கும் ஏற்ற ரகங்கள். ஒரு ஏக்கர் நடவு செய்ய 8 செண்டு நாற்றங்கால் (320 சதுர மீட்டர்) தேவை. இதற்கு 24 கிலோ விதை போதுமானது. குறைவான தண்ணீர் நிறுத்தி நாற்றங்காலில் முளைவிட்ட விதைகளை விதைப்பு செய்ய வேண்டும். 24 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிக்க வேண்டும். 5 நாட்கள் வரை நாற்றங்கால் காய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நாற்றின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 1.5 செ.மீ முதல் 2.5 செ.மீ வரை நீரை கட்டலாம். 8 செண்டு நாற்றங்காலுக்கு 400 கிலோ தொழுஉரம் இட வேண்டும். நாற்றுகளை 25 நாட்களுக்குள் பறிக்கக்கூடிய இடங்களில் 16 கிலோ டி.ஏ.பி.உரத்தை அடியுரமாக இட வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, அசோபாஸ், பொட்டாஷ் பாக்டீரியா தலா 100 மிலி வீதம் கலந்து நாற்றின் வேர்களை நனைத்து நடுவதால், நடவு வயலில் நாற்றுகள் உடனடியாக ஏற்றுக்கொண்டு பசுமையாக வளர உதவும். மண் மாதிரி ஆய்வு செய்து உரமிடுவது உரச்செலவை குறைக்கும். மண் ஆய்வு செய்யப்படாத இடங்களில் பொது பரிந்துரையாக ஏக்கருக்கு தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ வீதம் இட வேண்டும். இதில் தழைச் சத்தினை 5 பாகங்களாக பிரித்து அடியுரமாக ஒரு பங்கு, மேலுரமாக 4 முறை இட வேண்டும். மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். சாம்பல் சத்தினை பிரித்து ஒரு பங்கு அடியுரமாகவும், ஒரு பங்கினை இரண்டாவது மேலுரத்துடன் யூரியாவுடன் கலந்து இட வேண்டும். அறுவடைக்கு 3 நாட்களுக்கு முன்பாக நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விதைப்பு மேற்கொண்டு மண் வளத்தை கூட்டுவதுடன், கூடுதல் வருமானம் பெறலாம் என்று தஞ்சாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.