மதுரை, ஜன.16- தமிழகர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்கு பின் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் 817 காளைகள் அவிழ்க்கப்பட்டன. ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 435 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் காளைகள் களத்தில் நின்று விளையாடின. மிரட்டிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர். 17 காளைகளை அடக்கிய மதுரைஅவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசை வென்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிசான் கார் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் பரிசாக வழங்கப்பட்டது.. போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளைகளான அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த ஜி.ஆர்.கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு முதல் பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் நிசான் காரும், மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் வழங்கப்பட்டது. இரண்டாம் பிடித்த மதுரை அவனியாபுரம் ரஞ்சித்குமாருக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிளும், இரண்டாம் இடம் பிடித்த சிறந்த காளையான திருப்பரங்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சீனிவேல் பெயரில் அவிழ்த்த காளைக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியின் போது 2400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், குக்கர், கட்டில், பிரோ, சைக்கிள், சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டி யானது மாலை 5.15மணி வரை நடைபெற்றது. ஏராளமானோர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். போட்டியின் முடிவில் சிறந்த 2 மாடுபிடி வீரர்களுக்கும், காளை களின் உரிமையாளர்களுக்கும் பரிசு கோப்பைகளும், பரிசுகளும் பாராட்டு சான்றுகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ம.செள.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் வழங்கினர். 2 காவல்துறையினர் உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர். 10பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். முதல் பரிசு பெற்ற மாடுபிடி வீரருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசுபெற்ற அவனியாபுரம் கார்த்தி கோரிக்கை விடுத்தார். சிறந்த காளைக்கான பரிசை உயிரிழந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி.ஆர். கார்த்திக்குக்கு சமர்ப்பிக்கிறோம் என்று சிறந்த காளைக்கான பரிசு பெற்றவர்கள் கூறினர். இப்போட்டியில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமி நாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.