மயிலாடுதுறை, செப்.24 - எனக்கு இப்போ 65 வயசுக்கு மேலே இருக்கும். கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததிலிருந்து இந்த பள்ளிக்கூடத்துக் கிட்ட பஜ்ஜி, போண்டா சுட்டு விக்கிறேன். 25 பைசாவுக்கு விக்க ஆரம்பிச்சி, இப்போ 1 ரூபாய்க்கு விக்கிறேன் தம்பி... “லாபத்தையெல்லாம் நெனச்சி கடை வைக்கல, சின்ன புள்ளைங்க சந்தோஷமாக சாப்பிட்டுட்டு போறாங்களே, அதுவே போதும் தம்பி...” என புன்னகைத்தவாறே கூறினார் அந்த மூதாட்டி. மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் காமராஜபுரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயில் அருகில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்துபவர் இந்த மூதாட்டி தையல்நாயகி (65). இவரது கணவர் பெயர் கலியபெருமாள். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்காக மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்களோடு போண்டா, பஜ்ஜி போன்றவற்றையும் தயார் செய்து விற்று வருகிறார். மற்ற கடைகளில் பஜ்ஜி, போண்டா ஒன்றின் விலை 8 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை விற்கும் நிலையில், இவர் மட்டும் ஒரு ரூபாய்க்கே பல ஆண்டுகளாக விற்று வருகிறார்.
ஆரம்பத்தில் வெறும் 25 பைசாவுக்கு விற்க தொடங்கி, தற்போது 1 ரூபாயை தாண்டவில்லை இவர் தயார் செய்யும் பண்டங்களின் விலை. நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரது கடையை சூழ்ந்து கையிலுள்ள சில்லரை காசுகளை கொடுத்து ஆத்தா... எனக்கு ரெண்டு போண்டா, ரெண்டு பஜ்ஜி என முண்டியடித்து பெரும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். லாபத்தை எதிர்நோக்காமல் அன்றாடம் இடைவிடாது கடை நடத்துவதாகவும், பஜ்ஜி, போண்டாவில் நஷ்டமடைந்தாலும், மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் விற்பதால் தனக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை என்கிறார் மூதாட்டி தையல்நாயகி. விற்பனை அதிகமாக நடக்கிறது என்பதற்காக, விலையை அதிகப்படுத்தாமல் சுவையாகவும், தரமாகவும் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக 25 பைசா, 50 பைசா என விற்று தற்போது 1 ரூபாய்க்கு பஜ்ஜி, போண்டாக்களை விற்பனை செய்யும் மூதாட்டி தையல்நாயகியை ஊக்குவிக்கும் விதமாக, அவருக்கு கடை ஒன்றை அமைத்து தந்தால் அவரது சேவை மனப்பான்மைக்கு அங்கீகாரம் கிடைக்கும்!. ‘சரிங்க பாட்டி நாங்க கிளம்புகிறோம்’ என்று கூறியபோது, 2 போண்டாவையும், 2 பஜ்ஜியையும் கையில் தந்தவர், ‘சில நேரம் விக்காம உள்ளத புள்ளைங்கக் கிட்ட சும்மாவே தந்துவிடுவேன் தம்பி, காசு இருந்தா அதுங்க நம்மகிட்ட வாங்காம எங்க போய் வாங்குங்க... என்றுகூறி, நீங்க போய்ட்டு வாங்க’ என்றார் அன்பாய் கையசைத்து... - செ.ஜான்சன்