புதுக்கோட்டை, அக்.9 - புனல்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 282 பயனாளிகளுக்கு ரூ.91.65 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், புனல்குளம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 282 பயனாளிகளுக்கு ரூ.91,64,885 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினரும் வழங்கினர். பின்னர் ஆட்சியர் பேசுகையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின்கீழ் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.