தஞ்சாவூர், ஜூன் 26- ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வந்து மின்னணு உயிர்வாழ் சான்று வழங்கப்பட உள்ளது என தஞ்சை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வீட்டு வாசலிலேயே மின்னணு உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசும், இந்திய தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த மாதம் 31 ஆம் தேதி இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டு சுமார் 7,15,761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வருகிற ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்கள் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, “ஜீவன் பிரமான்” திட்டத்தின் மூலம் தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். எனவே மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.