சேலம்,அக்டோபர்.08- சேலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுத்த போக்குவரத்துத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிபவர் சதாசிவம். இவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு தங்களது வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குச் சோதனைக்கு வருவதற்கு முன் தகவல் தெரிவித்தால் மாதம் 50 ஆயிரமும், முன்பணமாக 1 லட்சமும் பேரம் பேசியுள்ளார்.
பின்னர் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் லஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் ரைட்டிற்கு வரும்போது தகவல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
அவர்,லஞ்சப் பணம் ரூபாய் ஒரு லட்சம் வைத்திருப்பதாகவும் இதனைச் சுங்கச்சாவடி அருகே உள்ள உணவகத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் டிஎஸ்பி கிருஷ்ணராஜனிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன் சுங்க சாவடி அருகே உள்ள ஓட்டலுக்கு தனியே சென்றார் .
அப்போது சதாசிவம் ரூபாய் ஒரு லட்சம் லஞ்சப் பணத்தை டிஎஸ்பி கிருஷ்ணராஜனிடம் வழங்கினார் அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நரேந்திரன் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து, சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சதாசிவத்தைக் கைது செய்தனர்.