districts

img

ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்!  

இடங்கணசாலையில் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவ, மாணவிகள், பயணம் செய்வதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.    

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாலை நேரத்தில் பள்ளியை விட்டுச் செல்லும் பொழுது இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன்பு மாணவ, மாணவிகள் தங்கள் ஊருக்கு செல்ல மணிக்கணக்கில் காத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால், மாலையில் பள்ளி விட்டு செல்லும் பொழுது இளம்பிள்ளை டூ சின்னப்பம்பட்டி பகுதிக்கு ஒரே ஒரு டவுன் பேருந்து மட்டும் அந்த நேரத்தில் செல்வதால் மாணவ, மாணவிகள் முண்டியடித்துக்கொண்டு பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.  

இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறும்பொழுது, நாங்கள் பள்ளி விட்டு செல்லும் பொழுது எங்கள் ஊருக்கு ஒரே பேருந்து செல்வதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். அரசு அதிகாரிகள்  இதனை நேரில் ஆய்வு செய்து மாலை நேரத்தில் மற்றொரு பேருந்து விடுமாறும், பேருந்து நிலையத்தில் மாணவிகளுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் பேருந்து நிலையம் முன்பு நடுரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி வருவதால் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.