சென்னை, மார்ச் 26- திருவொற்றியூர் 4ஆவது வார்டில் ரூ.38 லட்ச மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. விம்கோ ரயில் நிலையத்தில் இருந்து சண்முகபுரம், சண்முகபுரம் விஸ்தரிப்பு, டி.எஸ்.கோபால் நகர், பூம்புகார் நகர், அம்பேத்கர் நகர், சிவசக்தி நகர், பொன்னியம்மன் நகர், மதுரா நகர், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலை, மின் விளக்குகள் பராமரிக்கப்படாமல் இருந்ததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தொடர் முயற்சியால் தற்போது ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவு 11 மணிக்கு ரயிலில் வரும் பெண்களும் அச்சமின்றி இந்த சாலை வழியாக செல்ல முடிகிறது. நகர்மன்றத் தலைவராக ஜெயராமன் இருந்த போது அஜாக்ஸ் சுரங்க பாதையில் இருந்து அம்பேத்கர் நகர் வழியாக சண்முகபுரம் வரை புதிய சாலை அமைத்தார். அந்தச் சாலையுடன் இந்த புதிய சாலை இணைக்கப்பட்டுள்ளது.