சென்னை, அக். 12- வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்கு வரத்திற்கு இடையூறாக உள்ளதாகவும், அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் நடை பெறுவதாகவும் காவல்துறைக்கு புகார்கள் வந்தன. திருவொற்றியூர் நெடுஞ்சாலை மிகக் குறைவாக அகலம் கொண்டது. அந்த சாலை ஓரங்களும் ஆக்கிரமிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக புது வண்ணாரப்பேட்டை பகுதியில் காய்கறி கடைகள் பிளாட்பாரத்தை தாண்டி சாலை யில் அமைக்கப்படுகிறது. திருவொற்றியூர் தேரடி பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் பிளாட்பாரத்தை தாண்டி நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், வடக்கு மண்டல துணை ஆணையர் குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் கணேஷ் பாபு தலைமையில் காவல் துறையினர் நீண்ட நாட்களாக சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர். யானை கவுனி பகுதியில் வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து பேசின் பாலம், வண்ணாரப்பேட்டை நோக்கி செல்லும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள், பார்சல் மூட்டைகளை அகற்றினர். தொடர்ந்து சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரித்தனர்.