ராணிப்பேட்டை, மே 21-
இருளர் பழங்குடி இன மக்களுக்கு பட்டா கேட்டா ஜூன் 6இல் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட பேரவை கூட்டம் மாவட்டச் செயலாளர் எம்.குமார் தலைமையில் சோளிங்கர் ஒன்றியம் அக்கிச்சி குப்பம் ஊராட்சி ஜானகாபுரத்தில் சனிக்கிழமை (மே 20) நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாநில துணை தலைவர் ஆர்.தமிழ் அரசு ஆகியோர் பேசினர்.
மாவட்டத் தலைவர் சேகர், பொருளாளர் வேலு, நிர்வாகிகள் பாபு, விஜயா, ஜெயமாலனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இருளர் காலனியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கேரள அரசு போல் 10 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்க வேண்டும், இருளர் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் மாவட்டத் தலைவர் கே.சேகர் தலைமையில் ஞாயிறன்று (மே. 21) அன்று பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாநில துணைத் தலைவர் ஆர்.தமிழரசு, மாவட்டச் செயலாளர் எம்.குமார், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு ஆகியோர் பேசினர்.