நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு கள்ளக்குறிச்சி, டிச 24- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் 77,916 பயனாளி களுக்கு ரூபாய் 424 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இந்த விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணு, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்டக்குழு பெருந்தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், வீட்டுமனை ஒப்படைப்பு, சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை, நரிக்குறவர், பழங்குடியினர், மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு குடும்ப அட்டை, கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி உள்ளிட்டவற்றையும் அமைச்சர் வேலு வழங்கினார். வேளாண் மானிய திட்டங்கள், தோட்டக்கலை பயிர்கள் மானிய திட்டத்தின் கீழ் உதவிகள், மின் இணைப்புகள், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் உதவி, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி தொகுதியில் 68,879 பயனாளிகளுக்கு 192 கோடி மதிப்பிலும், சங்கராபுரம் தொகுதியில் 3,072 பயனாளிகளுக்கு 77 கோடி மதிப்பிலும், ரிஷிவந்தியம் தொகுதியில் 3,454 பயனாளிகளுக்கு 91 கோடி மதிப்பிலும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் 2,511 பயனாளிகளுக்கு 62 கோடி மதிப்பிலும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.