districts

img

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு: அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை

சென்னை,ஜன.12- தமிழகத்தில் 10, 11 மற்றும் 12  வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “கொரோனாவின் முதல் மற்றும் 2 வது அலைகளின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனாவின் 3-வது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழலில்,  1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடை பெறுகிறது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் எளிதாக  கொரோனா தொற்றால் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.சி., மெட்ரிகுலேஷன், மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி “மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர். நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்து வது குறித்து அந்தந்த பள்ளிகள் முடிவு எடுக்கலாம் என்றும் தமிழக  அரசு கொள்கை முடிவெடுத்து ள்ளது.மேலும் நேரடி வகுப்புகள் நடத்தினால் கலந்து கொள்வது மாணவர்களின் விருப்பத்திற் குட்பட்டது” என்று கூறினார். அதற்கு, நீதிபதிகள் 3-வது அலை அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்புகளின் மாணவர்க ளுக்கு நேரடி வகுப்புகள் நடத்து வதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த வேண்டும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்“ என்று தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கினர். பின்னர் மனுதாரர் தரப்பிடம், “அரசின் கொள்கை முடிவை மீறி பள்ளிகளை மூடும் படி நாங்கள் உத்தரவிட முடியாது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளார்கள்? என்ற விவரங்கள் ஏன் மனுவில் இடம் பெறவில்லை?” என கேள்வி எழுப்பினர். பின்னர், மனுதாரர் தரப்புக்கு அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து வழக்கை திரும்ப  பெறுவதாக மனுதாரர் அப்துல்  வகாபுதீன் தரப்பில் தெரிவிக்கப் பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.