districts

img

பணிநிரந்தரம் கோரி போராடிய செவிலியர்கள் கைது

சென்னை, பிப். 21 - பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற எம்ஆர்பி செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் எம்ஆர்பி செவிலியர்கள் அனை வரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேசிய மருத்துவ ஆணையம் மற்றும், இந்திய பொது சுகாதாரத் தர நிறுவனத்தின் பரிந்துரை  அடிப்படையில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும், கொரோனா காலகட்டத்தில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணி செய்யும் செவிலி யர்களுக்கு பிற மாநிலங்களில் உயர்த்தி யது போன்று தமிழ்நாட்டில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும், ஒப்பந்த தொகுப்பூதிய முறைகளை அறவே கைவிட்டு, நிரந்தர தன்மையுடைய ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும், உயர்த்தப்பட்ட ஊதியம் 18 ஆயிரம் ரூபாயை கருவூலம் மூலம் ஊதியம் பெறும் செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (பிப்.21) டிஎம்எஸ் வளாகத்தில் பெருந்திரள் முறை யீடு நடத்த தமிழ்நாடு எம்ஆர்பி செவிலி யர்கள் மேம்பாட்டு சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. இதன்படி போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சசிகலா, பொதுச்செயலாளர் சுபீன் தலைமையில் வந்தவர்களை டிஎம்எஸ் வாயிலிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் வாயிலேயே போராட்டம் நடத்தி அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப் பட்டவர்கள் பட்டினி போராட்டம் நடத்தினர்.