அம்பத்தூர், நவ. 3- ஆவடி சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட நடுகுத்தகை ஊராட்சி, வசந்தா நகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளாக பூங்கா அமைக்கப்பட வில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் பூங்கா அமைத்து தரக் கோரி ஆவடி சட்டப்பேரவை உறுப்பினரும், சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சருமான சா.மு.நாசரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் பூங்கா அமைக்க, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இந்தப் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, ஒப்பந்த தாரருக்கு சமீபத்தில் பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வசந்தா நகரில் பூங்கா அமைக்கும் பணியை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சித்தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் செந்தாமரை உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.