districts

img

செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு

சென்னை, ஜன.30- செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் பெறுவதையும், மைக்ரோ சிப் பொருத்துவதையும் மாநகராட்சி கட்டாயமாக்கி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் வியாழனன்று (ஜன.30) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாதவரம், கள்ளிக்குப்பம், ஓட்டேரி, நொளம்பூர் ஆகிய 4 இடங்களில் விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும், வீராங்கல் ஓடையின் பக்கவாட்டுச்சுவரை உயர்த்தி, கல்வெட்டுகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பின் போது சிற்றுண்டிகளை தமிழ்நாடு பனைவெல்லம் உற்பத்தியாளர் கூட்டுறவு இணைய சங்கத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து விநியோகிக்க பள்ளி தலைமையாசிரியர் வழங்க அனுமதி அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15 மண்டலங்களிலும் 81 நவீன 3டி மாடல் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் கோர அனுமதி அளித்தும், செல்லப் பிராணிகளை வளர்க்க உரிமம் பெறுவதோடு, மைக்ரோ சிப் பொருத்துவதை கட்டாயமாக்கியும், நவீன மாட்டு கொட்டகைகளில் கால்நடை ஒன்றுக்கு தினசரி ரூ.10 வசூலிக்கவும், மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.75 கோடி மதிப்பில் கூட்ட அரங்கம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் 95ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கூட்ட அரங்கம் கட்டவும் அனுமதி அளித்து மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.