districts

img

தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை

கிருஷ்ணகிரி, ஜன. 27- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை, அஞ்செட்டி  வட்டத்திற்கும் பயன்படும் மருத்துவமனையாகும். தினந்தோறும் புறநோயாளிகள் 1000 பேர் வரை வந்து செல்கின்றனர். மருத்துவ மனையில் குறைந்த பட்சம் 25 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். தற்போது, 14 மருத்துவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  ஆனால், 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். தினமும் 6 மருத்துவர்கள் வேறு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறுகின்றனர். 55 செவிலியர்கள் தேவை யான நிலையில், 25 பேர் உள்ளனர்.30 கழிவறைகளை சுத்தம் செய்ய 2 தூய்மை பணியாளர்களே உள்ளதால் பெரும்பாலான நாட்கள் சுகாதாரமற்று பயன்படுத்த முடியாத நிலையில் கழிவறைகள் உள்ளன. இங்கு பணிபுரிந்த சமையலர் ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை சமையலர் பணியமர்த்தப்படவில்லை. ரத்த வங்கி,கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் வசதி,மருத்துவ அலுவலர் இல்லை.இதனால் இங்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். மருத்துவர்களும் ஊழியர்களும் வேலைப்பளு காரணமாக கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருவதாக கூறுகின்றனர். காடு, மலைகள், வனப்பகுதிகள் நிறைந்த இங்கு விஷக்கடிக்கான மருத்துவம் கூட இல்லை. எனவே 2 வட்டங்களுக்கு பயன்படும் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவர்கள், ஊழி யர்களை தேவைக்கேற்ப பணி அமர்த்த வேண்டும். தேன்கனிக்கோட்டை நகரின் வெளிப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.இன்னும் கட்டப்படாததால் மாணவர்கள் நினைத்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்வதற்கு வசதியாகவும், மாலை நேரங்களில் சமூக விரோதிகள் பயன்படுத்துவ தற்கும்,கால்நடைகள் விலங்குகள் இரவில் வந்து அடைவதற்கான தளமாகவும் பயன்பட்டு வருகிறது. பள்ளிக்கு சுகாதார கழிப்பறை வளாகம், சுகாதாரமான குடி நீர் வசதி இல்லை. மாணவர்களும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து கணக்கற்ற முறை பள்ளி நிர்வாகத்திடமும்,வட்ட கல்வி அதிகாரிகளிடமும்,வட்டாட்சியரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவர்கள் ஊழியர்கள் தேவைக்கேற்ப பணி அமர்த்தி தரமான மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை உடனடியாக கட்டி, தேவையான ஆசிரியர்களை பணியமர்த்தி,கழிப்பிட வசதி சுகாதாரமான குடி நீர் வசதி உடனடியாக செய்து தர வேண்டுமென தேன்கனிக்கோட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று (ஜன.27) ஆர்ப்பாட்டம் நடத்தினர். கெலமங்கல ஒன்றியத் தலைவர் சி.கணேஷ் தலைமை வகித்தார். தளி,கெலமங்கலம் ஒன்றிய தலைவர்கள் திவாகர், ஹரிஷ், மாநில இணை செயலாளர் செல்வராஜ் விளக்கி பேசினார். மாவட்டசெயலாளர் இளவரசன், இளம் தலைவர் புருஷோத்தமரெட்டி நிர்வாகிகள் நவ்ரோஜ், நந்திஸ், அம்ரிஷ் கலந்து கொண்டனர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சிபி.ஜெயராமன்,ஆர்.நடராஜன் மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா,ஒன்றிய செயலாளர் டி.ராஜா வாழ்த்தி பேசினர்.