சென்னை, செப். 20- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. அப்படி ஏதேனும் பொருட்களை தவற விட்டால், அதற்கு மெட்ரோ ரயில் நிறுவனம் பொறுப்பேற்காது. எனினும் பயணத்தின் போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது “இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்” மூலமாகவோ அதை பெற முடியும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் “இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலு வலகத்தை” திறந்து வைத்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இதுவரை தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக பயணிகளுக்கு இழந்த பொருட்கள் மீட்டு தரப்பட்டது. இதுவரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்ட வர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் நேரடி யாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகி தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், மின்னஞ்சல்: LFO@cmrl.in,இணையதளம்: https://chennaimetrorail.org/lost-and-found-enquiry மூலம் இழந்த பொருட்கள் தொடர்பான கேள்விகளை கேட்கலாம் என்றும் தெரிவித்தனர். இதில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் எஸ்.சதீஷ்பிரபு, (இயக்கம் மற்றும் பராமரிப்பு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.