districts

img

ஜெயிலர் திரைப்படம் கேரளத்தில் ஏற்படுத்திய சர்ச்சை

     மிகப்பெரிய விளம்பரப் புயலைக் கிளப்பிவிட்டு, வியாழனன்று வெளிவந்திருக்கும் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கேரளத்தில் வேறுவிதமானதொரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியிருக்கும் இந்த ஜெயிலர் கேரளத்தில் இன்னொரு திரைப்படத்தின் வெளியீட்டையே தள்ளிவைக்கச் செய்திருக்கிறது. 

      மலையாள மொழியில் ஜெயிலர் என்ற அதே பெயரில் இன்னொரு படம் உருவாகியிருக்கிறது. அதனை சக்கீர்மடத்தில் இயக்கியிருக்கிறார். தியான் ஸ்ரீநிவாசன் நடித்துள்ளார். இதனால் மலையாளத்தில் மட்டுமாவது ரஜினியின் ஜெயிலர் படத்தின் பெயரை மாற்றி வைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சக்கீர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ரஜினி நடித்த படத்திற்கு அதிகமான திரையரங்குகளை ஒதுக்கியிருப்பதாகவும், தனது ஜெயிலர் படத்திற்கு 75 திரையரங்குகளை ஒதுக்கித்தரக் கேட்டும் அது தரப்படவில்லை என்றும் சக்கீர்மடத்தில் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.  

    கேரள ஃபிலிம் சேம்பர் அலுவலக வாயிலில் ‘மலையாள சினிமாவைக் காப்பாற்றுங்கள்!’ - என்ற பதாகையை ஏந்தியபடி தனியாகப் போராடினார். அப்போது, “தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தால் மலையாள சினிமா மூச்சுத்திணறுகிறது!” - என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அவரது மலையாள ஜெயிலர் திரைப்பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.