சென்னை, அக். 3- சென்னை, துரைப்பாக்கம் டிபி ஜெயின் கல்லூரி நிர்வாகம், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதை குறிப்பிடாமல், 2022 உயர்நீதிமன்ற உத்தரவை கல்லூரி நிர்வாகம் நிறைவேற்ற தவறியதை மறைத்து, தனக்கு சாதகமா சில வாதங்களை வைத்து சென்னை உயர் நீதிமன்ற ஒரு நீதிபதி அமர்வில் ஒரு உத்தரவைப் பெற்றுள்ளது. இது சிறுபான்மையினர் கல்லூரி. இரண்டு நீதிபதிகள் அமர்வுதான் இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் என்ற நடை முறை உள்ளது. ஒரு நீதிபதி அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவின்படி, கல்லூரி நிர்வாகம் அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளை அரசிடம் ஒப்படைத்துவிடுவதாக முறைப்படி தெரி வித்தால், தெரிவிக்கபட்ட நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்கு அரசு அதை ஏற்றுக் கொண்டு, ஏற்றுக் கொண்டமைக்கான கடிதத்தை அரசு வழங்க வேண்டும் என்பதே 18.09.2024 நீதிமன்ற உத்தரவின் சாரம். உத்தரவு நிறைவேற்றப்பட்டால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று பொதுபள்ளிக்கான மேடை கூறியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு மாநில அரசிடம் அளித்துள்ள மனுவில் அரசு இடம், பல்கலைக்கழக மானியத்தில் காட்டப்பட்ட மாணவியர் விடுதி, விளையாட்டு அரங்கம், அரசு உதவிபெறும் பிரிவுகளால் கல்லூரிக்கு உருவாகி இருக்கும் நற்பெயர் ஆகியவற்றை வணிக ரீதியாக பயன்படுத்தி பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்துடன் தற்போதைய கல்லூரி நிர்வாகம் செயல்படுகிறது. ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் தர முன்வரும் போது அதை வேண்டாம் என்று மறுத்து, நாங்கள் மாணவர்களிடம் வசூல் செய்து ஆசிரியர்களுக்கு ஊதியம் தந்துக் கொள்கிறோம் என்று நிர்வாகம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? விண்ணப்பம் தராமலேயே, மாணவர்கள் விண்ணப்பிக்க வில்லை என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? இக்கல்லூரியில் அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகள் தொடர்ந்து செயல்பட வேண்டும். உயர்நீதிமன்ற ஒரு நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். சட்டப்படி மற்றும் நிர்வாக ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அரசு உதவி பெறும் பிரிவுகள் கல்லூரியில் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.