திருவள்ளூர், செப்.30- திருத்தணியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் டி. ரவீந்திரன் வலியுறுத்தினார். திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகள், அரக்கோணம், நெமிலி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி விவசாயிகள் என 3000 திற்கும் மேற்பட்டோர் கரும்பு அனுப்புகின்றனர். இந்த சர்க்கரை நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. 1984 இல் துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழுது பார்க்கும் வேலையை மட்டும் செய்து வருகிறது. இதனால், அடிக்கடி எந்திரங்கள் பழுதாகி சர்க்கரை உற்பத்தி குறைகிறது. கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகள் நலனை பாதுகாக்க சர்க்கரை ஆலை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். சர்க்கரைத் துறை ஆணையர் கரும்பு விவசாயிகள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார், இந்த நிலையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட வேண்டும், வெட்டுக் கூலியை முறைப்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒன்றிய மோடி அரசின் சர்க்கரை விற்பனையில் கடைபிடிக்கப்படும் கோட்டா முறையை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பெருமாள் தலைமையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிறகு, திருவாலங்காட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் துவக்கினர். புறப்பட்டு 10 அடி தூரம் கூட செல்லவில்லை. அதற்குள்ளாக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். அப்போது கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் உள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதிமுக ஆட்சியின்போது ஆலையை மேம்படுத்திட பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். ஆனால் அரசு கோரிக்கையை நிறைவேற்ற வில்லை மாறாக ஆலையை மூட வேண்டும் என முடிவெடுத்து. கடும்பு விவசாயிகள் தொடர் முயற்சி, போராட்டத்தால் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை மேம்படுத்துவோம் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் வாக்குறுதி கொடுத்துள்ளது. வருகிற கூட்டத் தொடரில் இதற்கு நிதி ஒதுக்கி வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீநாத், ஜெயச்சந்திரன், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.