பெண் கொடுக்க மறுத்ததால் ஜன்னல்களை உடைத்த காதலன் சென்னை, ஜூன் 25- காசிமேடு பல்லவன் நகரைச் சேர்ந்தவர் சுனில் (எ) சுண்டு (23). இவர் மீன்பிடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால் இளம் பெண்ணின் பெற்றோர் சுனிலின் நடவடிக்கை பிடிக்காததாலும், அவர் மீது வழக்குகள் உள்ளதாலும் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண்ணுக்கும் வேறொரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த சுனில் திங்கட்கிழமை நள்ளிரவு தனது நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுனில், அவரது நண்பர்கள் விக்னேஷ், சர்மா, குப்புசாமி, சஞ்சய், சுபாஷ், லிவிங்ஸ்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.