கள்ளக்குறிச்சி, பிப்.11- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நீல மங்கலம் ஏ.கே.டி பள்ளி மைதானத்தில் 2 ஆண்டாக நடைபெறும் ‘கல்லை’ புத்தக காட்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பி னர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தகக் காட்சியை திறந்து வைத்து உரை யாற்றிய அமைச்சர்,“புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாக கொண்டு செல்வதற்கு சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை போன்று மாவட்டங்கள் தோறும் புத்தக விற்பனை கண்காட்சிகள் நடத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, இந்த புத்தக காட்சி பிப். 10 முதல் 19 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக பதிப்பக அரங்குகள் உள்ளது. தினந்தோறும் மாலை நேரங்களில் சிந்திக்க தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் சிந்தனை சொற்பொழிவு, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதற்காக இது போன்ற புத்தக காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி-கல்லூரி மாண வர்கள் அதிகளவில் புத்தகங்களை வாங்கி படித்து பயன் பெற வேண்டும்” என்றார். இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட நூலக அலுவலர் காசிம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ரிஷி வந்தியம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதி களில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 16.221 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.