அரசிற்கு அவ பெயரை உருவாக்கும் அவுட் சோர்சிங்
போக்குவரத்து ஊழியர் மாநாட்டில் அ.சவுந்தரராசன் பேச்சு
சென்னை,டிச,14- போக்குவரத்துத்துறையில் அவுட் சோர்சிங் முறையில் ஆட்களை நியமிப்பது அரசுக்கு அவ பெயரை ஏற்படுத்தும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் கூறினார். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க 57வது மாநாட்டை நிறைவு செய்து அவர் பேசியது வருமாறு: நாட்டில் தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள சலுகைகள் ஆட்சியாளர்கள் கருணை யால் பெறப்பட்டதல்ல, போராடி பெற்றது. தற்போது ஒப்பந்த முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம். மாநில அரசு மேல்முறையீட்டுக்கு சென்றால் அது அரசிற்கு கெட்ட பெயரை உரு வாக்கும். ஏனென்றால் ஒப்பந்தமுறை, அவுட்சோர்சிங் எங்கள் கொள்கை என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். தற்போது தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தாராளமயம் என்ற பெயரில் ஒப்பந்த தொழிலாளர்கள், அவுட்சோர்சிங், அதிக நேரம் தொழி லாளர்களை வேலை வாங்குவது, குறைந்த ஊதியத்தில் பணியமர்த்துவது போன்ற நடவடிக்கைகளை முதலாளி வர்க்கம் மேற்கொள்கிறது. சுரண்டலை தீவிரப்படுத்த முயற்சிக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள முதலாளித்து வம் இந்த பொருளாதார நிலை மூலம் நீடித்து நிற்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளது. ஏனென்றால் பணம் ஒரு சிலரிடம் குவிந்துகொண்டே இருக்கிறது. மக்கள் கைக்கு வர வேண்டிய பணம் அம்பானி, அதானி போன்ற ஏகபோக முத லாளிகளிடம் செல்கிறது. மக்களிடம் பணம் வந்தால்தான் அதன் மூலம் பொருளாதார சுழற்சி ஏற்படும். மக்கள் ஏழைகள் ஆக்கப்பட்டால் உற்பத்தியில் தொடர்ந்து வளர்ச்சி ஏற்படாது. அதனால்தான் சீன அரசு இப்போது ஏகபோக பெரு நிறு வனங்களை அரசுடமையாக்கி வருகிறது. அதனால்தான் சீனாவில் ஆண்டுதோறும் நீடித்த 10 விழுக்காடு வளர்ச்சி ஏற்படுகிறது. தொழில்களில் மட்டுமல்ல, விவ சாயத்திலும் ஏகபோக நிலை உருவாகி வரு கிறது. அதற்கேற்றார்போல் கொண்டு வரப்பட்டது தான் புதிய 3 வேளாண் சட்டங்கள். இந்த சட்டம் அமலுக்கு வந்த அடுத்த 15 ஆண்டுகளில் விவசாய நிலம் முழுவதும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறு வனங்களிடம் சென்றிருக்கும். மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக அது தற்போது தடுக்கப்பட்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மோடி அரசு அந்த சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையை தடுக்க, இயற்கை வளங்களை பாதுகாக்க, தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பாதுகாக்க, பொதுத்துறை நிறுவனங்களை, சமூக நீதியை பாதுகாக்க தொழிலாளர்களும், விவ சாயிகளும் இணைந்து மக்களை அணி திரட்டி போராட வேண்டும். அப்போதுதான் விவசாயமும், விளை நிலங்களும், இயற்கை வளங்களும், தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகள், ஜனநாயகம் பாதுகாக்கப்படும். எனவே வரும் நாடாளு மன்ற தேர்தலில் தொழிலாளர்களை, விவ சாயிகளை, உழைப்பாளி மக்களை திரட்டி தொழிலாளர் விரோத, மக்கள் விரோத பாஜகவை தோற்கடிப்போம். இவ்வாறு அ.சவுந்தரராசன் கூறினார்.
எண்ணூர் எண்ணெய் கழிவில் இருந்தது என்ன?: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
சென்னை, டிச. 14- சென்னை எண்ணூர் கழிமுகத்தில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியில் அதிகளவில் பீனால் கலந்திருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால், சென்னையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக எண்ணூரில் வெள்ளத்தில் எண்ணெய் கழிவுகள் கலந்து அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், எண்ணூர் கழிமுகம், சிபிசிஎல் நிறுவனத்தின் மழைநீர் வடிகால் பகுதி மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கழி முகம் ஆகிய மூன்று இடங்களிலிருந்து நீர் மாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளி வந்துள்ளன. அதில், தண்ணீரில் பெட்ரோலிய சுத்திகரிப்புக்கு பயன்படும் பீனால் எனப்படும் கரிம கலவை மற்றும் எண்ணெய், கிரீஸ் ஆகியவை அனு மதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கலந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டிய பீனால், கொசஸ்தலை ஆற்றின் கழிமுக பகுதி நீரில் 48.4 மில்லி கிராம் ஆக உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டிய எண்ணெய் மற்றும் கிரீஸ் 828 மில்லி கிராம் ஆக உள்ளது. சிபிசிஎல் ஆலையின் தெற்கு வாயிலில் உள்ள மழைநீர் வடிகால் பகுதியில், ஒரு லிட்டர் தண்ணீரில் பீனால் 18.6 மில்லிகிராம் வரையிலும், எண்ணெய் மற்றும் கிரீஸ் லிட்டருக்கு 230 மில்லிகிராம் என்ற அள விலும் படர்ந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எண்ணூர் கழிமுக பகுதியில், ஒரு லிட்டர் தண்ணீரில் பீனால் 28.3 மில்லிகிராம் வரையிலும், எண்ணெய் மற்றும் கிரீஸ் 158 மில்லிகிராம் வரையிலும் உள்ளது. இதனால் மீன் வளமும், மீன் பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
19 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை,டிச.14- சென்னை நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் குற்றவாளிகளை கைதுசெய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வழிப்பறி, கஞ்சா விற்பனை, பண மோசடி, ரேசன் அரிசி கடத்தல், மதுபாட்டில் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த லதா (53), அடையாறை சேர்ந்த மெர்சிதீபிகா, துரைப் பாக்கத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ், தரமணி மிதுன் சக்கரவர்த்தி, திருவொற்றியூர் அகில் அகமது உள்ளிட்ட மொத்தம் 19 பேர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார். இந்த ஆண்டில் மொத்தம் 667 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம்பறித்தல், போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை குடிநீர் ஏரிகளில் 90 விழுக்காடு தண்ணீர் இருப்பு
சென்னை,டிச.14- புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் குடிநீர்வழங்கும் சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது.இதைத்தொடர்ந்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 626 மில்லியன் கனஅடி (10 டி.எம்.சி)தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 90.38 விழுக்காடு தண்ணீர் இருப்பு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் 3076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 737 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 257 கன அடிதண்ணீர் வருகிறது. 396 கனஅடி கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 189 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ள ளவான 500மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 54 கனஅடி தண்ணீர் அப்படியே வெளி யேற்றப்படுகிறது.
மல்லிகை பூ விலை உயர்வு
சென்னை,டிச.14- கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்ற நிலையில் தற்போது அதன் விலை ரூ.1,500ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சாமந்தி ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், சீசன் காரணமாக மல்லி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல் 2 நாட்களில் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது’ கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிலோவில் வருமாறு :- மல்லி-ரூ.1,500, ஜாதி- ரூ.500, முல்லை- ரூ.900, கனகாம்பரம்- ரூ.1,000, சாமந்தி- ரூ.180, பன்னீர் ரோஜா- ரூ.120 சாக்லேட் ரோஜா- ரூ.160, அரளி- ரூ.200 முதல் ரூ.400வரை, சம்பங்கி- ரூ.200க்கு விற்பனையாகிறது.
வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு ஒன்றிய குழுவிடம் வரதராஜபுரம் நல மன்ற கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
சென்னை, டிச. 14- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகாவிற்குட்பட்ட வரதராஜபுரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த ஒன்றியக்குழு தலை வர்களிடம் வரதராஜபுரம் நல மன்ற கூட்ட மைப்பின் தலைவர் வெ.ராஜசேகரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், 2015ஆம் ஆண்டு மழை பொழிவில் இருந்து தொடர்ந்து எப்போது மழை பெய்தாலும் இந்த பகுதி மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் கடுமையான பொருள் சேதங்கள் ஏற்படுகின்றன. எனவே, இனிமேல் இந்த பாதிப்புகள் ஏற்படா வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும், அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைப்பதுடன், தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். அதே போல், செம்பரம்பாக்கம் ஏரியை நான்கு அடிக்கு தூர்வார வேண்டும். வெள்ள பாதிப்புகளை தடுக்க அதிகாரி கள், மக்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச் சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் ஆய்வு செய்து உரிய முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகையும் மத்திய குழு விடம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உடன் ஊராட்சி தலைவர் மு.செல்வமணி உள்ளிட்ட நலமன்ற நிர்வாகிகள், பொது மக்கள் இருந்தனர்.
வேலூரிலிருந்து விமான சேவை
வேலூர்,டிச.14 வேலூர் அடுத்த அப்துல்லா புரத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி விமான நிலை யம் உள்ளது. ஒன்றிய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சீர மைக்கும் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடை பெற்று வருகிறது. இதில் 97 ஏக்கர் பரப்பளவில், ரூ.65 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது. அதற்காக 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதள பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணி கள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் நிறை வடைந்துள்ளன. இந்த நிலையில் விமான நிலையத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலை யத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்த னர். விமான நிலைய நடவடிக்கைகளுக்கான அனுமதி களை வழங்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்கு நரகம் (டி.ஜி.சி.ஏ.) பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் மத்திய படைகளுடன், உள்ளூர் காவல்துறை யின் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி. கே.சிங், வேலூர் விமான நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளன. விமான நிலையத்திற்கு உரிமை வழங்கும் பணி நடந்து வருகிறது.அது தயாரான பிறகு 9 இருக்கைகள் கொண்ட விமானங்கள் வேலூரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்பட உள்ளது.இது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என கூறினார்.
பாலியல் தொல்லை: வாலிபர் கைது
கடலூர், டிச.14- கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் கவின்ராஜ் (33). திருமணமான இவர் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த கவின் ராஜை தேடி வந்தார். இந்த நிலையில், கவின் ராஜ் கடலூர் முதுநகர் மீன் பிடித்தளத்தில் பதுங்கி இருந்த கவின் ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
பாலியல் சீண்டல்: ஆசிரியர் கைது
விழுப்புரம்,டிச.13- வானூர் அருகே உள்ள திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருப வர் மகேஸ்வரன். வயது 38. இந்த பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் அரசுப் பள்ளி சார்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதற்கு திருவக்கரை பள்ளியில் இருந்து 9 ஆம் வகுப்பு மாணவிகள் இருவரை தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் விழுப்புரம் அழைத்து சென்றார். அங்கு மகேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் மாணவர்களை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, பெற்றோரிடம் கூறியதால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மகேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நடந்த சம்பவம் உண்மை என்பதும், மேலும் பல மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதும், வீடியோக்களை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்டச் செயலாளர் எம்.கே.முருகன் தலைமையில் எஸ்.பாலமுருகன், மாயவன், அன்சாரி, விஸ்வநாதன், முகமது ஆனால் ஆகியோர் மாணவர்கள் பெற்றோரை சந்தித்தனர். பிறகு, ஆசிரியர் மகேஸ்வரன் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என காவல் துறையிடம் வலியுறுத்தி னர். இதனைத் தொடர்ந்து கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.