கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சத்தம் போட்டுக்கொண்டே இருந்த இளைஞரின் கை,கால்கள் கட்டி, வாயை அடைத்ததில் மூச்சு திணறி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள ஹெல்பிங் ஹேண்ட்ஸ் என்ற பெயரில் அரசு அனுமதி பெற்ற போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மறுவாழ்வு மையத்தில் 35க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம், சக்தி நகர் கிராமம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பிச்சை முத்து. இவரின் மகன் கிஷோர் குமார் (20) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கிஷோர் குமார், போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிஷோரை ஹெல்பிங் ஹேண்ட்ஸ் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் அருகில் இருக்கும் தனது நண்பர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி தொடர்ந்து கூச்சலிட்டு வந்துள்ளார். இதனால் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த ஊழியர்கள் நேற்று இரவு கிஷோரின் கை, கால்களைக் கட்டிலில் கட்டி வைத்தனர். இதைத் தொடர்ந்து கிஷோர் குமார் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால், அவரின் வாயில் துணி வைத்து அடைத்துள்ளனர்.
இதில் மாணவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிக் கிடந்துள்ளார்.இதையடுத்து, மாணவரை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, மாணவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த கிஷோரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.