சிதம்பரம், டிச.31- விழுப்புரம் முதல் நாகை வரை 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காகச் சிதம்பரம் அருகே உள்ள பெரிய பட்டு முதல் சி.முட்லூர் வரை நான்கு வழி சாலைக்காக நிலம், வீடு, வணிக வளாகம் கொடுத்து உரிய இழப்பீடு கிடைக்காமல் அல்லாடும் அனைத்து கிராம மக்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொட்டும் மழையில் வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களைச் சிதம்பரம் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா,மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, ராமச்சந்திரன். மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜா, வாஞ்சிநாதன், முத்து, ஜெயசித்ரா, விஜய், விவசாயிகள் சங்க மாவட்டத்துணை தலைவர் கற்பனைச்செல்வம், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கொளஞ்சி கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கோட்டாட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.