கோவை, ஆக.1- சட்டவிரோதமாக சந்தன கட்டைகளை கடத்தி சென்ற லாரியை, கோவை போலீசார் விரட்டி பிடித்து சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், போத்தனூர் காவல் துறையினர் வெள்ளலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் லாரியை நிறுத்த போலீசார் முயன்றபோது, லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து போத்தனூர் காவல் துறையினர் லாரியை பின்தொடர்ந்து, சென்று மடக்கி நிறுத்தியுள்ளனர். இதன்பின் லாரிய சோதனையிட்ட போது அதில் மூட்டை மூட்டையாக சந்தன கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுநர் மனோஜை பிடித்த போலீசார், லாரியை மாவட்ட வன அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சந்தன கட்டைகள் கேரள மாநிலம், மலப்புரம் பகுதியிலிருந்து சென்னைக்கு எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 57 மூட்டைகளிலிருந்து, 1051 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து ஓட்டுநர் மனோஜிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.