ஈரோடு, ஜுலை 30- பவானி ஆற்று நீரை மாசுபடுத்தும் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து பவானி ஆப்பக்கூடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பவானி ஆற்றில் சக்தி சர்க்கரை ஆலை கழிவு நீர் கலந்து மாசுபடுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆப்பக்கூடல் பகுதியில் புற்று நோயைப் பரப்பும் மட்டி துர்நாற்றத்தைத் தடுத்து நிறுத்திட வேண்டும். காற்றை மாசுபடுத்தி ஆலை சாம்பல் கண்ணில் விழுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் எம்.காளீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, தாலுக்கா கமிட்டி செயலாளர் எஸ்.மாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், ஆப்பக்கூடல் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கே.விஜயலட்சுமி, என்.சின்னுச்சாமி, ஏ.ஜி.கொழந்தசாமி, எஸ்.மோகனா, எஸ்.தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பி.தளிர்கொடி நன்றி கூறினார்.