நாமக்கல், ஜூலை 24- மாணவர்களின் உயிர்கொல்லியாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்க பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய மாநாடு ஐசிஎல் சங்க அலுவலகத்தில் நவீன் தலைமையில் நடைபெற்றது. தருண் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டக்குழு உறுப்பினர் தங்கராஜ் உரையாற்றினார். இம்மாநாட்டில், புதிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்பப்பெற வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய தலைவராக நவீன், ஒன்றிய செயலாளராக தருண் உட்பட 13 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், மாவட்ட செயலாளர் தே.சரவணன் நிறைவுரையாற்றினார். கிருபா நன்றி கூறினார்.