districts

கேரளத்தைப் பின்னுக்குத் தள்ள முயற்சி

கேரளத்தைப் பின்னுக்கு தள்ள ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது; ஒக்கி, நிபா, கோவிட் போன்ற நெருக்கடியிலும் உதவ மறுத்து விட்டது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். புதிய கேரள அரங்கத்தின் ஒரு பகுதியாக திருச்சூர் மாவட்டத்தில் பல்வேறு தொகுதிகளில் முதல்வர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நமது மாநிலத்தின் மறுவாழ்வு உலக கவனத்தைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணத்தில் கூட ஒன்றிய அரசு நமக்கான உரிமையை மறுத்தது. மாநிலம்  கைதூக்கி விடப்பட வேண்டிய கட்டத்தில் ஒன்றிய அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உதவி செய்யத்  தயாராக இருந்த நாடுகள் கூடத் திருப்பி அனுப்பப்பட்டன. கேரளா மீண்டு விடக்கூடாது என்பது மட்டுமே ஒன்றிய அரசின்  இலக்கு. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் உதவிகளை நிராகரித்து, கேரளத்தை சுரண்டும் அணுகுமுறை பின்பற்றப்பட்டது. இந்தக் கட்டங்களில் எதிர்க்கட்சியான யுடிஎப்-பும் கேரளத்துடன் நிற்காமல் எதிர்ப்பை எழுப்ப முயன்றது. அது இன்றுவரை தொடர்கிறது. ஒன்றிய அரசின் பாகுபாட்டைக் கூட கேள்வி கேட்க யுடிஎப் தயாராக இல்லை. கேரளத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய நாடாளு மன்றத்தில் யுடிஎப் எம்.பி.க்கள் மவுனம் காக்கின்றனர். பெருவெள்ளத்தின் போது ஊழியர்களின் சம்பளம் சவாலைக் (திருப்பி அளிக்கும் வகையில் பிடித்தம் செய்தல்) கூட எதிர்த்தனர். இக்கட்டான சூழ்நிலையிலும் கேரளத்திற்கு துணை நிற்க யுடிஎப் தயாராக இல்லை. ஒவ்வொரு காலத்திலும் செய்ய வேண்டியதைச் செய்து உரிய காலத்தில் முன்னேற்றம் காண அரசு முயற்சிக்கிறது. மக்களின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும்தான் மறுவாழ்வுக்கான அடிப்படை. ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் எதிர்கொண்டால் நம்மால் முடியாதது எதுவுமில்லை. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.