districts

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரனைக்கு வரும் வன்கொடுமை வழக்கு

திருப்பூர், ஆக.4- பட்டியலின பெண் சமையலர் பாப்பாள் மீது சாதிவெறியர்கள் வன்கொடுமை நிகழ்த்திய வழக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (சனிக்கிழமை) திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரனைக்கு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு, அவிநாசி வட்டம், சேவூர் ஒன்றியம், குட்டகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பணிமாறுதலில் வந்த சமையலர் பாப்பாள் மீது சாதி ஆதிக்கவாதிகள் சிலர் திரண்டு, ‘ தலித் பெண் சமைக்கக்கூடாது என்று கூறி சமையலறையிலிருந்த பாத்திரங்களை தூக்கியெறிந்தும், பள்ளிக் குழந்தைகள் முன்பு சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியும், பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.  இதனை அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகள் ஒன்றுதிரண்டு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் நாடு முழுவதும் பேசு பொருளானது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அன்றைய வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றநிலையில், வழக்கு விசாரணை நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது தடை நிறைவுபெற்றதால், இன்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில், இந்த தீண்டாமை வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வருகிறது.