கடலூர்,ஜூன்13 - கடலூர் பகுதியில் வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து சென்ற 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் காவல்துறையி னர் துரத்தியபோது தப்பி செல்ல முயன்ற 3 பேரின் காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடலூர் மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்தவர் சந்திர மனைவி செல்வி (53) இவர் கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்தபோது, மாலை இவரது வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் செல்வியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த மோதிரம், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட நகைகளை பறித்து சென்றனர்.
இதே போல மஞ்சக்குப்பம் கிழக்கு வேணுகோபால புரத்தை சேர்ந்த அன்பழகன் மனைவி கவுரி (35) என்பவர் கடந்த 1 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, அங்கு புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் கௌரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில், காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த 5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க முயன்றனர். இதில் காவல்துறையினர் துரத்தியதில் மூன்று வாலிபர்களின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் 2 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்த தங்கபாண்டியன் (29), திருப்பாப்புலியூரை சேர்ந்த சதீஷ் என்கிற ஹரிதாஸ் (24), ஜீவானந்தம் (24), குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பாச்சார பாளையத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (24), திருப்பாப்புலியூரை சேர்ந்த சிம்மசாமி (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.