சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்திற்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு கடந்த வாரம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பாரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வு இன்று வெளியிட்ட தீர்ப்பில், சத்தியமங்கலம் சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இலகுரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கும் 16.2 டன் எடைக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு எப்போதும் அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து நேரங்களிலும் பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. 27 கி.மீ. தூரமுள்ள சாலையில் ஒவ்வொரு 5 கி.மீ. தூரத்திலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.
மின் இணைப்பு இல்லாத இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். சிசிடிவி பதிவுகளை 45 நாட்களுக்கு பாதுகாக்கும் வகையில் அமைக்க வேண்டும். வனவிலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் மேல்மட்ட அல்லது கீழ்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.