districts

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரியலூர், ஜூலை 15 - அரியலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் “பிரதமர் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் ஏழை சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் மும்மடங்கு கேஸ் விலை ஏற்றப்பட்டுள்ளது. பருத்தி விலை உயர்வால் பல ஆளை தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவால் அங்கு மக்கள் புரட்சி ஏற்பட்டது போல், இந்திய பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள சீரழிவின் காரணமாக இந்தியாவிலும் அந்த நிலை ஏற்படக்கூடும். மாநில அரசின் பொறுப்பில் உள்ள பல்கலைக்கழகத்தில் அதன் இணைவேந்தராக உள்ள கல்வி அமைச்சருக்கும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல், ஆளுநர் பட்டமளிப்பு விழாவை நடத்துவது கண்டனத்துக்குரியது. இது ஆளுநர் போட்டி அரசை நடத்துகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் ரொம்ப உள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க அவர்கள் நீதிமன்றத்தை நாடும் பொழுது தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக வலிமையான வாதங்களை முன்வைத்து நீதிமன்றத்தை நாடி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;