விருதுநகர், நவ.5- விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவரது சகோதரர் சூரியநாராயணன். சிங்கப்பூரில் உள்ளார். அவருக்கு நிலம் வாங்க ரங்கநாயகி முடிவு செய்தார். இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் சிவகிரிபட்டியை சேர்ந்த பத்மநாபன் என்பவர், தான் ஓய்வு பெற்ற நீதிபதி எனவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை நம்பி ரங்கநாயகி ரூ.70 லட்சம் வரை பத்மநாபனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் நிலத்தை பதிவு செய்து தர வில்லை. இதுகுறித்து விசாரித்த போது பத்மநாபன் குறிப்பிட்ட நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்த மானது எனத் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கநாயகி பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு பத்மநாபனுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து ரங்கநாயகி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.