திருச்சிராப்பள்ளி, மே 27- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக சேவைகள் வழங்கிட 18 இடங்களில் ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் சார்ந்த பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள், நடமாடும் சிகிச்சை வாகனம் மூலமாகவும், சேவைகள் வழங்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வட்டார அளவில் செயல்படுத்த ஆர்.வி. தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் 10 முன்களப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, மாவட்டம் முழுவதும் வீடு வீடாகச் சென்று களப்பணிகள் செய்து வருகின்றனர். சமூக தரவு கணக்கெடுப்பு மற்றும் குடும்ப கணக்கெடுப்பு முன்களப் பணியாளர்களால் 10.3.2025 முதல் அனைத்து வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கும், மாற்றுத்திறனாளி அல்லாத குடும்பங்களுக்கும் சென்று கையடக்க கணினி மூலம் பிரத்யேக செயலி கொண்டு அடிப்படை விபரங்கள் மற்றும் ஆரம்ப நிலை மாற்றுத்திறனாளிகள் கண்டறிதலை செய்து வருகின்றனர். இதற்கு மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், குடும்ப அட்டை போன்ற ஆவணங்களும் சரிபார்ப்பதற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் பணியாற்றும் முன்களப்பணியாளர்கள் கோரும் போது, அதனை காண்பித்திடவும், மாற்றுத்திறனாளிகள் அல்லாத வீடுகளில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை மட்டும் வழங்கிட வேண்டுமாறும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 0431-2412590-ல் தொடர்பு கொள்ளுமாறும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.