districts

பருவம் தவறி பெய்த மழையால் சாகுபடி பாதிப்பு

தஞ்சாவூர், மே 27-  பருவம் தவறி பெய்த மழையால், சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. அதனை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேட்டூர் அணை வரும் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் விவசாயிகளுக்கு தடை இல்லாமல் அனைத்து வேளாண் டெப்போக்களிலும் விதை, உரம், பூச்சி மருந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தூர்வாரும் பணியை விரைந்து முடித்து தடையில்லாமல் தண்ணீர் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.                     குறுவை தொகுப்பு திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகைக் கடன் பெறுவதில் புதிய விதியை தளர்த்தி பழைய முறைப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 அறிவித்ததை விரைவாக அரசாணை வெளியிட்டு, விவசாயிகளுக்கு கரும்புக்கான பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணை திறக்கப்படும் அன்றே குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு ரசாயன உரங்கள் இலவசமாக வழங்கப்படவில்லை. எனவே டிஏபி, யூரியா, பொட்டாஷ் ஆகியவற்றை கடந்த ஆண்டுகளில் வழங்கியது போலவே இலவசமாக குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்க வேண்டும். ஆள் பற்றாக்குறையை போக்கும் விதமாக உரம், பூச்சி மருந்து தெளிக்கும் ட்ரோன்களை இயக்க விவசாயிகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்க வேண்டும். கதிர் அடிக்கும் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்குவது போல் மருந்து தெளிக்க ட்ரோனும் குறைந்த வாடகைக்கு வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த கன மழையால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. நிவாரணத்திற்காக ஆவணங்கள் வாங்கப்பட்டும் இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.  மேலும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தொடர் மணல் திருட்டு நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.  முன்பிருந்தவாறு அவரவர் கட்டுமானங்களுக்கு தேவையான மணலை அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். பிள்ளைவாய்க்கால் வலது கரை, வெள்ளாம்பெரம்பூர் செல்லும் பாதை கடந்த 2013 இல் அமைக்கப்பட்டது. இதை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக அமைத்துத் தர வேண்டும். பூதலூர் ஊராட்சி ஒன்றியம் முத்து வீரக்கண்டியன்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள சாயக்குடி ஏரிக்கு, வெண்டயம்பட்டி கிராமத்தில், அயனாபுரம் வாரியின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஏதுவாக வழங்கு வாய்க்கால் அமைக்க வேண்டும்.  இவ்வாறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.