திருவண்ணாமலை, மே 16- கலசப்பாக்கம் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளதால் விவ சாயிகள் மிகவும் வேதனையடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலசப்பாக்கம் பகுதியில் 101 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் கலசப்பாக்கம் பகுதி வெள்ளக்காடாக மாறியது. இதில் கலசப்பாக்கம், பில்லூர், கப்பலூர், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப் பாளையம், பழமொழியில், லாடவரம், பூண்டி, நார்த்தாம்பூண்டி உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 900 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர் மழையால் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர். மேலும் இது சம்பந்தமாக வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 பேர் காயம் அதேபோல் சேத்துப்பட்டு பகுதியிலும் இடியுடன் மழை பெய்தது. இதில் ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் வீட்டின் மீது இடி தாக்கியது. இதில் அவரது வீட்டின் மேற்கூரையும் மாட்டுக்கொட்டகையும் இடிந்து விழுந்தது. இடி தாக்கியதில் அங்கிருந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும் இதில் படுகாயமடைந்த சங்கர் (50). அவரது மனைவி சூடாமணி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.